ஆட்சி அமைக்க உரிமை கோர  ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்

by Editor / 05-05-2021 03:47:49pm
 ஆட்சி அமைக்க உரிமை கோர  ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைக் கடந்து திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திமுக மட்டும் 125 இடங்களில் ஜெயித்துள்ளது. 
) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக அதாவது முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து இன்று (மே 5) காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். 
அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தன்னை சட்டமன்றக் கட்சித் தலைவராக திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்த கடிதத்தை ஸ்டாலின் வழங்கினார். மேலும் ஆட்சி அமைப்பதற்கான உரிமையையும் கோரினார். இதை ஏற்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர், விரைவில் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறியிருக்கிறார்.
ஏற்கனவே மு.க.ஸ்டாலின், ‘கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பதவியேற்பு நிகழ்வை எளிமையாக ஆளுநர் மாளிகையிலேயே நடத்திட முடிவு செய்துள்ளோம்’ என்று செய்தியாளர்க்ளிடம் தெரிவித்திருந்தார். இதையே ஆளுநரிடமும் கூற, அதை வரவேற்று ஆளுநரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  திமுக தலைவருக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார்”என்று தெரிவித்திருக்கிறார்.ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும், கொரோனா சோதனைகளும் தொடங்கிவிட்டன.

 

Tags :

Share via