மின் கட்டணம் செலுத்த 31ம் தேதி வரை அவகாசம்!

by Editor / 11-05-2021 08:01:33am
மின் கட்டணம் செலுத்த 31ம் தேதி வரை அவகாசம்!

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதமின்றி செலுத்த, 31ம் தேதி வரை, தமிழக மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளது.தமிழகத்தில் நேற்று முதல், 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால், இந்த கால கட்டத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி செலுத்த அவகாசம் அளிக்கும்படி, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, அபராதமின்றி கட்டணம் செலுத்த, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: தாழ்வழுத்த நுகர்வோர், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள், கடந்த, 10ம் தேதி முதல் வரும், 24ம் தேதி வரை இருக்கலாம். அத்தகையோர், மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி, மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், மின் நுகர்வோருக்கு வழங்கியுள்ள இணையதள வழி வாயிலாக, வலைதள மற்றும் கைபேசி வங்கியியல், 'பேமண்ட் கேட்வே, பாரத் பில் பே' போன்றவற்றின் வாயிலாகவும், பணம் செலுத்தலாம்.மே மாத கணக்கீட்டு தொகை விபரம், மின் நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், மின் நுகர்வோர்கள், இந்த விபரங்களை, 'www.tangedco.gov.in' என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via