பாடத்திட்டப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்: வைகோ கண்டணம்

by Editor / 21-04-2021 03:47:02pm
பாடத்திட்டப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்:  வைகோ கண்டணம்


மத்திய பா.ஜ.க. அரசு கல்வித்துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை;
11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடங்களிலிருந்து கூட்டாட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும மதச்சார்பின்மை போன்ற அத்தியாயங்கள் முற்றிலும் நீக்கப்பட்டன. இந்திய ஜனநாயகம், சமூக அமைப்பு மற்றும் சமூகச் செயல் முறைகள் பற்றிய அத்தியாயங்கள் சமூகவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டன.
இவ்வாறு பாடங்கள் நீக்கப்பட்டதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் சிந்தனைப் போக்கு இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. தற்போது மீண்டும் அதே பின்னணியில் பல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல் அளித்து பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இளங்கலை வரலாறு படிப்புக்கான பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்றவற்றைச் சேர்த்து இருக்கின்றனர். டெல்லி பல்கலைக் கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம், இந்தியாவின் தொடக்க கால வரலாற்றைப் பேசுகிறது. ஆனால் தற்போது புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம், "பாரத்வர்ஷாவின் கருத்துருவாக்கம் என்ற பாடம் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது.
'இடைக்கால இந்தியா' பற்றி தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன. அந்தக் காலகட்டம் குறித்து மூன்று பருவங்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம்கள் கால ஆட்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஒன்றை முஸ்லிம் மன்னர்கள் பற்றிய பாடங்களில் 'படையெடுப்பு' என்ற சொல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 'இந்திய சமூகம்' என்று பொதுத் தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடத்தை மாற்றி, ஏழாவது தாளில், இந்து சமூகம், முஸ்லிம் சமூகம் என்று பிரித்து, அவற்றில் இந்து சமூகத்தின் சாதி மற்றும தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் என்று பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன.
'1857' சிப்பாய் கிளர்ச்சியை, 'முதல் சுதந்திரப் போர்' என்று இந்துமகா சபை தலைவர் வி.டி. சாவர்கர் வர்ணித்ததை அப்படியே பாடத்தில் சேர்த்துள்ளனர். அதற்கு முன் வங்காளத்தில் நடந்த சன்யாசி கிளர்ச்சி, ஒடியாவில் பைக்கா கிளர்ச்சி, தமிழ்நாட்டில் வேலூர் புரட்சி போன்றவை இடம்பெறவில்லை.
மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற வரலாற்றில் வாழும் மாபெரும் தலைவர்களின் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்தில் இருட்டடிப்பு செய்துள்ளனர். இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. கல்வித் துறையில் காவி சித்தாந்தத்திற்கு பாதை அமைக்கும் பாசிசப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

 

Tags :

Share via