தொழிலாளி முகத்தை சிதைத்து படுகொலை : போதை ஆசாமிகள் செய்த வெறிச்செயல்

by Admin / 18-02-2022 12:31:23pm
தொழிலாளி முகத்தை சிதைத்து படுகொலை : போதை ஆசாமிகள் செய்த வெறிச்செயல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் சேகாம் பாளையம் காட்டு பகுதியில் நேற்று காலை அடையாளம் தெரியாது 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் முகம் கல்லால் தாக்கப்பட்டு முகம் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அவ்வழியே சென்ற சிலர் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் அந்த ஆணின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.சசாங் சாய் உத்தரவின் பேரில் பல்லடம் டிஎஸ்பி வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து வயது 40 என்பதும் அவர் சேகாம்பாளையத்தில் சுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

 
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது. தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருப்பூரை சேர்ந்த அங்கேரிபாளையத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரும், அவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதிக மதுபோதையில் சம்பவம் நடந்த முந்தின நாள் இரவு இரு சக்கர வாகனத்தில் அருள்புரம் சேகாம்பாளையம் சாலையில் சென்றதாகவும், 

அங்கு காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்த மாரிமுத்துவிடம் தகராறு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அவர்களை தாக்க முயன்றதாகவும் இதில் மாரிமுத்துவை கீழே தள்ளிய உதயகுமார் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி மாரிமுத்துவின் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் தெரியவந்தது. 

இந்நிலையில் அருள்புரம் பகுதியில் பல்வேறு பனியன் நிறுவனங்களில் பல்லடம் போலீசார் நடத்திய சோதனையில் உதயகுமார் மட்டும் மாயமானது தெரியவந்தது. 

இதையடுத்து கரைப்புதூர் பகுதியில் பதுங்கியிருந்த உதயகுமாரை இன்று பல்லடம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த கார்த்தியை பல்லடம் தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via