தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 19 வயது இளைஞரின்

by Staff / 23-03-2022 04:56:20pm
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 19 வயது இளைஞரின்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 19 வயது இளைஞரின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை அடக்கம் செய்ய முயன்ற உறவினர்களை தடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மயானத்திலிருந்து மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

வாலாஜாபேட்டை செளராஷ்டிரா தெருவை சேர்ந்த 19 வயது இளைஞர் சஞ்சய். பாலிடெக்னிக் முடித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சய் தனது வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதே நேரத்தில் அவரது உடலில் சந்தேகமான முறையில் வெட்டுக் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வாலாஜாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சஞ்சயின் உறவினர்கள் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த வாலாஜா பேட்டை போலீசார் உடனடியாக மயானத்திற்கு சென்றதோடு, அடக்கம் செய்யாமல் உடலை கைப்பற்றி மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக காயங்களுடன் உயிரிழந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முயன்ற உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 

 

Tags :

Share via