விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மத்திய மந்திரி பார்வையிட்டார்.

by Staff / 14-10-2022 04:27:03pm
 விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மத்திய மந்திரி பார்வையிட்டார்.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மத்திய மந்திரி 
மத்திய உள்துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நிஷித் பிரமானிக் நேற்று கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். அவரை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு தலைவர் சி. எஸ். சுபாஷ் உள்பட பலர் வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று காலை 9 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்றார். படகு துறைக்கு வந்த அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கன்னியாகுமரி படகு துறை மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். அதன் பிறகு அவர் விவேகானந்த மண்டபத்துக்கு சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர். சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்று அவருக்கு சுற்றி காண்பித்தனர். மத்திய மந்திரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தை தரிசித்தார். அதன் பிறகு மெயின் மண்டபமான சபா மண்டபத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவப்படம் மற்றும் அன்னை சாரதா தேவி ஆகியோரின் உருவப்படம்முன்பு நின்று வணங்கி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர முழு உருவ வெண்கல சிலை முன்பு நின்று வணங்கி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அங்கு உள்ள தியான மண்டபத்தில் தரையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். அவருடன் குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு தலைவரும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலருமான சுபாஷ் உள்பட பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via