தடையின்றி சேவை வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவு>

by Editor / 22-11-2022 10:00:35pm
தடையின்றி சேவை வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவு>

தமிழகம்  முழுவதும் அரசு கேபிள் டிவி மூலமாகப் பொதுமக்களுக்குச் சேவை வழங்க  செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரின்  மும்பையை  அடிப்படையாகக் கொண்ட மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  மற்றும் பாலாஜி மிசின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்படி 614 கோடி ரூபாய் மதிப்பில் 37 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, நிர்வகிக்கும் சேவைகளை வருடாந்திர அடிப்படையில்  செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனங்கள் காலதாமதம் செய்ததன் காரணமாக, சுமார் 52 கோடி ரூபாய் பணம் அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகை தொடர்பாக ராஜன், அரசுக்குக் கடிதம் அனுப்பியும் தொகை வராததால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் ராஜன் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர். இந்த நிலையில், அரசு கேபிள் டிவி சேவை துண்டிப்பு தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் முறையீடு செய்யப்பட்டது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சேவை  மென்பொருளைப் பராமரித்து வழங்கி வரும் இரு நிறுவனங்களுடன், அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால்  மத்தியஸ்தர்  மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணம் தரவில்லை என்பதற்காக, கேபிள் சேவையைத் துண்டிக்கக் கூடாது என்றும், மத்தியஸ்தர் மூலமாக பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் இது குறித்துத் தீர்வு காண வேண்டும்  என கூறிய நீதிபதி, அரசுக்கு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 

 

Tags :

Share via