ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரில்  உரையாற்ற தகுதியற்றவர்- திருமாவளவன்

by Editor / 08-01-2023 09:09:54am
ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரில்  உரையாற்ற தகுதியற்றவர்- திருமாவளவன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை இன்று காலையில் சந்தித்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழக ஆளுநர் நாளை துவங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில்  உரையாற்ற தகுதியற்றவர், 
தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துக்களை பேசி வருகிறார், தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்.

வேண்டுமென்று பெரியார் அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும் என்று அதற்கு எதிரான ஒரு கருத்தை, தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் விரும்புகிறார்.ஆளுநர் ஆர் எஸ் எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருகிறார்.அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம்,அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் இது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். 

திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை.இவர் சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை படிப்பது எந்த வகையில் பொருத்தம். திராவிட மாடல் என்று முதல்வரால் அழைக்கப்படுகிற திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்றுவதற்கு அவர் எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த அநாகரீகத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். முதல்வர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். அவர்களை கைது செய்யக்கோரி வருகிற ஜனவரி 11ஆம் தேதி விடுதலை கருத்தை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஈஷா மையத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ  மரணம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவர் எவ்வாறு யோகா மையத்தில் இருந்து வெளியேறினார்? ஏன் அவர் தப்பித்து ஓடும் நிலை ஏற்பட்டது? பிறகு சடலமாக கண்டெடுக்கக்கூடிய அவலம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இதனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.
 

 

Tags :

Share via