கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விநியோகம்-4 பேர் கைது.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு காவல்துறை முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.இதன்தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தும்,சொத்துக்களை பறிமுதல் செய்யவும்,வங்கிக்கணக்குகளை முடக்கி வருகிறது.இதன்தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு அருகே செல்போன் மூலம் கஞ்சா விற்பனை நடப்பதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது இடலாக்குடி பகுதியை சேர்ந்த அஸ்லாம் (வயது 25) என்பதும் அப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும், இதில் மேலும் 3 பேர் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அஸ்லாமை போலீசார் கைது செய்து, 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் இடலாக்குடியை சேர்ந்த முகமது இர்பான் (20), அல் அனீஷ் (24) மற்றும் திட்டுவிளையை சேர்ந்த முகமது (25) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :