சொத்திற்காகவும்,பணத்திற்காகவும் பெற்ற தாயை கார் ஏற்றி கொலை செய்த கொடூர மகன் கைது.

by Editor / 21-03-2023 10:49:14pm
சொத்திற்காகவும்,பணத்திற்காகவும் பெற்ற தாயை கார் ஏற்றி கொலை செய்த கொடூர மகன் கைது.

 தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி முருகம்மாள் (வயது 67). இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ள சூழலில், சங்கரநாராயணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இலத்தூர் விளக்கு பகுதியில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான வழக்கு தற்போது,  நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், கடந்த 3ஆம் தேதி முருகம்மாளும் அவரது இளைய மகனான உதயமூர்த்தி(38) என்பவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் அவரது கணவர் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராக  நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக கார் ஒன்று வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், முருகம்மாள் மற்றும் உதயமூர்த்தி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், முருகம்மாள் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 அதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த உதயமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த இலத்தூர் போலீசார் முருகம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்திய போது, முதற்கட்ட விசாரணையில், உதயமூர்த்தியும், முருகம்மாளும் சென்ற மோட்டார் சைக்கிளானது விபத்தில் சிக்கவில்லை எனவும், திட்டமிட்ட கொலை என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, முருகம்மாளை கொலை செய்யும் நோக்குடன் காரை வைத்து இடித்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, முருகம்மாளுக்கும், அவரது மூத்த மகனான மோகன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வருவதும், இது தொடர்பான வழக்கு செங்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

மேலும், முருகம்மாளின் கணவரான சங்கரநாராயணன் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் முருகம்மாளுக்கு கிடைக்கப்பெற்ற விபத்து நஷ்டஈடு தொகையையும் கேட்டு முருகம்மாளிடம், அவரது மூத்த மகன் மோகன் கடந்த சில நாட்களாக பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததும், இதற்கு முருகம்மாள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மோகனுக்கு சொத்தும் கிடையாது, பணமும் கிடையாது என அவரை புறந்தள்ளியதால் ஆத்திரமடைந்த மோகன் இன்று உதயமூர்த்தியும், முருகம்மாளும் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரைக் கொண்டு இடித்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

 அதனைத்தொடர்ந்து, முருகம்மாளை கொலை செய்த அவரது மூத்த மகனான மோகன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த முத்தையா என்ற நபரை கைதுசெய்த நிலையில் மூத்த மகனான மோகன் மற்றும் மற்றொரு நபரையும் போலீசார் கடந்த 18 நாட்களாக வலை வீசி தேடி வந்த நிலையில் தனிப்படைகள் அமைத்து கேரளா,கர்நாடக,மாநிலப்பகுதிகளில் தேடிய நிலையில் காவல்துறையினருக்கு தண்ணிகாட்டிய குற்றவாளி இன்று அதிகாலை இலத்தூரில் பணம் உறவினர் ஒருவரிடம்  வந்தபோது மூத்த மகனான மோகன் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் செங்கோட்டை நீதிபதி வீட்டில் ஆஜர்செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.இந்தவழக்கில் மற்றொரு நபரைதேடிவருகின்றனர்.

 

Tags :

Share via