காவிரி நீர் விவகாரம்| அழுத்தம் கொடுக்க கூறினோம்: துரைமுருகன்

by Staff / 19-09-2023 11:51:05am
காவிரி நீர் விவகாரம்| அழுத்தம் கொடுக்க கூறினோம்: துரைமுருகன்

தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்துமாறு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கோரினோம் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.காவிரி விவகாரத்தில் தமிழக எம். பி. , க்கள் அடங்கிய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் நாங்கள் வலியுறுத்தினோம். கர்நாடக அரசுக்கு தண்ணீர் இருந்தும் திறந்துவிட மனமில்லை.அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. இவை பிறப்பிக்கும் உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.5000 கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை கர்நாடகா அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று எடுத்துக் கூறினோம். " என்றார்.

 

Tags :

Share via