புடவையால் தூளி கட்டி விளையாடிய மாணவன் கழுத்து இறுகி பலி

by Staff / 21-09-2023 01:42:24pm
புடவையால் தூளி கட்டி விளையாடிய மாணவன் கழுத்து இறுகி பலி

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு, இருளர் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ராசையா (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான ராசையா, அத்திப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று மாலை வீட்டுக்குள் உள்ள ஒரு இரும்புக் கம்பியின் கொக்கியில், கயிற்றின் மூலம் புடவையால் தூளி கட்டி, மாணவன் ராசையா ஊஞ்சலாடி விளையாடியுள்ளார். அப்போது, ராசையாவின் கழுத்தை கயிறு இறுக்கியதில் தலை சிக்கி, வெளியே வரமுடியாமல் அவர் மூச்சு திணறியபடி தத்தளித்துள்ளார். கயிறு நன்றாக சுழன்ற காரணத்தினால் ராசையாவின் கழுத்து மேலும் மேலும் இறுகிய நிலையில் அவர் வலியில் துடித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் தாய் செல்வி ஓடிவந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராசையாவை மீட்டனர். பின்னர் அவரை மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே ராசையா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்தனர். ராசையாவின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via