சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் - இபிஎஸ்
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இருக்கை விவகாரத்தில் 10 முறை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இருக்கை விவகாரம் குறித்து பலமுறை கடிதம் குறித்தும் சபாநாயகர் தீர்வை அளிக்கவில்லை. நியாயமான கோரிக்கையை சபாநாயகரிடம் வைத்துள்ளோம்.எதிர்க்கட்சி துணைத் தலைவர் எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில்தான் அமரவைக்கப்பட வேண்டும்.நீதிமன்ற தீர்ப்பின் நகலை அளித்த பின்பும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதது சரியல்ல. சபாநாயகரிடம் இருந்து முழுமையாக பதில் கிடைக்கவில்லை. சபாநாயகர் மரபை கடைபிடிக்க வேண்டும்.புனிதமான இருக்கையில் உள்ள சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கும் முன் சபாநாயகரே பதிலளிக்கிறார். மக்கள் பிரச்னைகளுக்கு அமைச்சர்கள் பதில் தரும் முன்பே சபாநாயகர் பேசிவிடுகிறார் என விமர்சித்தார். இருக்கை ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகளை ஏற்காதது ஏன்? என சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும். எங்கள் நியாயமான கோரிக்கை குறித்து பேரவையில் முழுமையாக பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
Tags :