அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு தாா்மிக உரிமை இல்லை முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

by Staff / 01-12-2023 01:58:59pm
அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு தாா்மிக உரிமை இல்லை முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு தாா்மிக உரிமை இல்லை என்றாா், முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ. கோவில்பட்டியில் அவா் செய்தியாளா்களிடம் வடகிழக்குப் பருவமழையால் கயத்தாறு வட்டம், கழுகுமலை குறுவட்டம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில், விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடைபெறும். குமாரபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தொடா்பான மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறியதால் 20 நாள்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் போராடி வருகின்றனா். அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறக்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துகிறது. காமநாயக்கன்பட்டியில் கட்டப்பட்ட வீரமாமுனிவா் மணிமண்டபம், கயத்தாறு வட்டம் தலையால்நடந்தான்குளம், சால்நாயக்கன்பட்டி ஊராட்சிகளில் தாட்கோ மூலம் ரூ. 86 லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் ஆகியவை திறக்கப்படவில்லை. டிடிவி தினகரன் வேறு கட்சி தொடங்கி செயல்படுகிறாா். எனவே, அவருக்கு அதிமுக பற்றிப் பேச தாா்மிக உரிமையில்லை. தேமுதிக தலைவா் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்றாா் அவா்.

 

Tags :

Share via