காதல் என்ற பெயரில் பெண்களை டார்ச்சர் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!: கேரள முதல்வர் பினராயி எச்சரிக்கை..!!

by Admin / 12-08-2021 03:08:44pm
காதல் என்ற பெயரில் பெண்களை டார்ச்சர் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!: கேரள முதல்வர் பினராயி எச்சரிக்கை..!!

திருவனந்தபுரம்: காதலை ஏற்க மறுக்கும் பெண்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

 கேரளாவில் காதலை ஏற்க மறுக்கும் இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 30ம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தில் 24 வயது மருத்துவ மாணவி ஒருவர் அவரது சமூக ஊடக நண்பரால் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்

. இவ்விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர் தாமஸ் சட்டப்பேரவையில் எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், காதல் என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவோருக்கு எதிராக காவல்துறை ஒருபோதும் மென்மையாக நடந்துகொள்ளாது என்று தெரிவித்தார்.

 காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

பெண்களை அச்சுறுத்துதல், பின்தொடருதல் உள்ளிட்ட புகாருக்கு ஆளானவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், வரதட்சணை திருமணங்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக் கூடாது எனவும், அவர்கள் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பினராயி விஜயன் கூறினார். மேலும்,

 இதுபோன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்கள் மீதான சைபர் தாக்குதல் வழக்குகளில் தற்போதுள்ள சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இரண்டாவதாக கேரளா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 1455 கேஸ்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்காகப் பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via