ராம்குமார் மரணம்: நீதிமன்றம் இடைக்காலத்தடை.-மனித உரிமை ஆணைய பதிவாளர் பதில் அளிக்க உத்தரவு.

by Editor / 01-12-2021 05:49:08pm
ராம்குமார் மரணம்: நீதிமன்றம்  இடைக்காலத்தடை.-மனித உரிமை ஆணைய பதிவாளர் பதில் அளிக்க உத்தரவு.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பொறியாளர் சுவாதி கடந்த 2016 ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி காலை கொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன்  ராம்குமார் என்பவரை தென்காசி போலீசார்  நள்ளிரவில்  கைது செய்தனர்.அப்போது அவர் தற்கொலைக்கு முயன்றார்.

சிகிச்சைக்குப்பின்னர்  புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார்  மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகிறது.


இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மத்திய சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சூப்பிரண்டு அன்பழகன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் ராம்குமார் மரணம் குறித்து சுட்டிக் காட்டியுள்ள அவர், கைது செய்யப்பட்ட ராம்குமார் உயர் பாதுகாப்பு பிரிவு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று தான் விடுப்பில் இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்த ராம்குமார் அங்குள்ள மின்சார சுவிட்ச் பாக்சை, உடைத்து ஒயரை பிடித்து தற்கொலைக்கு முயன்று, பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ராம்குமாரின் உடல் எய்ம்ஸ் மருத்துவர் தலைமையில், பரிசோதனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மின்சாரம் தாக்கி தான் ராம்குமார் இறந்ததாகவும், ராம்குமாரின் உடலில் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான காயங்கள் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டும் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குள் தான் தாமாக முன் வந்து மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர முடியும் என்றும் ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விசாரிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கை முடித்து வைத்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.கல்யாணசுந்தரம், சிவஞானம் அடங்கிய அமர்வு ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க மாநில மனித உரிமை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மனித உரிமை ஆணைய பதிவாளர் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.


 

 

Tags :

Share via