திருமணம் செய்து வைத்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

by Admin / 28-02-2022 05:21:21pm
 திருமணம் செய்து வைத்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

ஆந்திரா மாநிலம் நகரி அடுத்த வரதய்ய பாளையத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சூளூர்பேட்டையை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் சிறுமியின் தாய்மாமன் ஆவார்.

தாய் மாமனுக்கும் சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க சிறுமியின் பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லை. இதனால் தான் படிக்க விரும்புவதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.
 
இருப்பினும் சிறுமியின் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என பள்ளி ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறுமி புகார் அளித்தார். 

அரசு அதிகாரிகள் உட்பட யாரும் சிறுமியின் திருமணத்தை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சிறுமையின் எதிர்ப்பை மீறி அவரது பெற்றோர் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி தாய் மாமனுடன் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்தனர்.

திருமணத்திற்கு பின்பு தாய் மாமன் வீட்டிற்கு சென்ற சிறுமி அவருடன் வாழ பிடிக்காமல் மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்தார். பின்னர் பள்ளிக்கு சென்று பாடம் படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமியை மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என அவரது பெற்றோர் மற்றும் கணவன் வீட்டார் வற்புறுத்தி வந்தனர்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சிறுமி நேற்று மாலை வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமி தூக்கில் தொங்குவதை கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்த வரதய்யபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இருந்தால் சிறுமி தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளின் மீது குற்றம்சாட்டினார்.

 

Tags :

Share via