மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணைக் கேட்ட இளம்பெண் காவலர் கையை கடித்த வழக்கில் கைது.

by Editor / 02-09-2022 06:01:03pm
மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணைக் கேட்ட இளம்பெண் காவலர் கையை கடித்த வழக்கில் கைது.

சென்னை திருவொற்றியூர் எஸ்.எல்.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் ரேவேந்திரன். தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரும் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கமாள் தெருவை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இந்நிலையில், இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு பச்சைகொடி காட்டியதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
பின்னர் அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் 5 பவுன் தங்க செயினும், ஒரு பைக்கும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் தரவேண்டும் என ரேவேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் இந்த தகவலை தெரிவித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். 
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் அடிக்கடி ரேவேந்திரன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.இதேபோல் சம்பவதன்று அவரது வீட்டிற்கு சென்று இளம் பெண் தகராறு செய்தபோது, அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, திருவொற்றியூர் போலீஸ் ஏட்டு சரவணன் மற்றம் இரண்டு காவலர்கள் அங்கு சென்று இளம் பெண்ணை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பெண் காவலர்களை தரைக்குறைவாக பேசியதோடு, தலைமை காவலர் சரவணணின் கையை கடித்து தகராறு செய்துள்ளார்.பின்னர் இளம் பெண் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. மாப்பிள்ளை வீட்டாருக்கு  கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via