தந்தையர் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

by Editor / 05-07-2021 01:26:02pm
தந்தையர் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வாண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதியான இன்று உலக அளவில் பல நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உயிர்கொடுத்த தாயை மதிப்பது போலவே நம்மை தனது தோள்மீது ஏற்றி இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்யும் தந்தையையும் இந்த நாளில் நாம் போற்றவேண்டும்.

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தந்தையின் அன்பிற்கு நிகர் தந்தையே. தந்தையர் தினம் 1910-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. சிறுவயதிலேயே தனது அன்னையை இழந்தவர் தான் அமெரிக்காவை சேர்ந்த சோனோரா லூயிஸ் டோட். சோனோராவையும் அவரது இளைய சகோதரர்களையும் தனி ஆளாக சோனோராவின் தந்தை வளர்த்தார், அவர் ஒரு போர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. டாட்டின் தந்தை தன்னலம் ஏதுமின்றி தனது குழந்தைகளை பாதுகாத்து வளர்த்தார்.

இந்நிலையில் பிற்காலத்தில் நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் அயராது பாடுபட்ட தனது தந்தை மற்றும் அவரை போன்று குடும்பத்தை கவனிக்கும் தந்தையர்களுக்காக தந்தையர் தினம் என்ற நாளை கொண்டாட விரும்பினார் சோனோரா. அதற்காக தனது தந்தையின் பிறந்தநாளான ஜூன் 5-ஆம் தேதியை உலக தந்தையர் தினமாக கொண்டாட அவர் மனு அளித்தார். ஆனால் ஆரம்ப நிலையில் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் சோனோரா உள்ளூர் தேவாலய சமூகங்களை தன்னுடைய இந்த கோரிக்கையில் பங்கேற்கச் செய்தார்.பின்னர் அவர்களுடைய மனு ஏற்கப்பட்டு ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நாளடைவில் தந்தையர் தினம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாற்றப்பட்டது. அடுத்த அரை நூற்றாண்டில், டோட் அமெரிக்காவில் பல பகுதிகளுக்கு பயணம் செய்தார். தந்தையர் தினத்தின் சார்பாக பேசினார் மற்றும் அதற்காக அவர் பல பிரச்சாரமும் செய்தார்.

அவருடைய முறைச்சியால் இன்று உலகின் பல நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இருப்பினும் உலக அளவில் தந்தையர் தினம் தோன்றியதற்கு இது போல பல காரணங்கள் பரவலாக கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், பிள்ளைகளின் எல்லா விதமான பொறுப்புகளையும் சுமந்து உயிர் அனுமதிக்கும் வரை தோழனாய் பயணிக்கும் தந்தைகளை தினமும் கொண்டாடுவோம்.

 

Tags :

Share via