ராஜீவ்காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை – கட்சித்தலைவர்கள் வரவேற்பு

by Editor / 11-11-2022 09:57:27pm
ராஜீவ்காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை – கட்சித்தலைவர்கள் வரவேற்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்பு விடுதலையானார். அதேபோல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை இன்று விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரும், ஒன்றிய அரசும் உள்நோக்கத்துடன் முடிவெடுக்காமல் இந்த வழக்கை கிடப்பில் போட்டு வந்தனர். ஆனால், உச்சநீதிமன்றம் இவர்களை தற்போது விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில், ராஜீவ் காந்தியும் அவரோடு சேர்ந்து சிலரும் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனைக்குரிய நிகழ்வாகும் என குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு மூலம் உச்சநீதிமன்றம் மாநில அரசின் உரிமைகளை உறுதிபடுத்தியதுடன், ஆளுநரின் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுக்கும் சரியான பாடம் புகட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழகில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது;                                                         
இதற்காக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசுக்கும், இதற்கு முன்பு இருந்த அரசுக்கும் நன்றிஎன - பழ நெடுமாறன் அறிக்கை.

 வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளனை தொடர்ந்து, தற்போது 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 30 ஆண்டுகள் அவர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்த நிலையில், இன்று அதற்கு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளால் இன்று நல்ல தீர்வு கிடைத்திருப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் சுதந்திர காற்றை சுவாசிக்க இருக்கும் அனைவரும் சந்தோசத்தையும், நிம்மதியையும் பெற எல்லாம் வல்ல இறவைனை வேண்டிகொள்வதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனை தொடர்ந்து, சாந்தன், முருகன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம் ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனை வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களின் நீண்ட சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் அவர்கள் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via