கணவனைஅடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி-மகன் கைது

by Staff / 23-11-2022 03:23:10pm
கணவனைஅடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி-மகன் கைது

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45), கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி உமாராணி (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கோவிந்தராஜ் தலையில் பலத்த வெட்டுக்காயம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, மாங்காடு போலீசார் கோவிந்தராஜின் மனைவி உமாராணி மற்றும் அவரது 16 வயது மகன் ஆகிய இருவரிடமும் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதில் சம்பவத்தன்று குடி போதையில் வந்த கோவிந்தராஜ் சமையல் செய்து கொடுக்குமாறு மனைவியை சரமாரியாக அடித்துள்ளார். மேலும் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த அவரது மகன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தந்தை கோவிந்தராஜின் தலையில் சரமாரியாக அடித்து விட்டு அருகில் இருந்த உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டார். அவருடன் சேர்ந்து அவரது தாயும் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது தன்னை மகன் அடித்த அவமானம் தாங்க முடியாமல் கோவிந்தராஜ் தூக்குப்போட்டு தொங்கியதாக தெரிவித்தனர்.

மேலும் போலீசார் கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மனைவியும் மகனும் சேர்ந்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தற்போது தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி கோவிந்தராஜின் மனைவி உமாராணி மற்றும் அவரது 16 வயது மகன் ஆகிய இருவரையும் மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via