இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

by Editor / 24-11-2022 08:52:23am
இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பி.டி.எஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழு கிணறு தாதா முத்தையப்பன் தெருவில் உள்ள ஹீரா ட்ரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி & கோ ஆகிய நிறுவனங்களிலும், அண்ணா நகரில் உள்ள இண்டிகிரேடட் அலுவலகத்திற்கு தொடர்புடைய பத்ரி என்பவரின் வீட்டிலும், சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வந்த புகாரை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனை, இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via