மகன் இறந்த அதிர்ச்சி தாயும் மயங்கி பலி
கூவத்துார் அருகே உள்ள பெருந்துறவு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமி, 70; இவரது மகன் சுந்தர், 38. திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், புதுச்சேரியில் வசித்து வந்தார்.கடந்த ஆறு மாதங்களாக, மஞ்சள் காமாலை நோயால் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு, சுந்தர் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக, சொந்த ஊரான பெருந்துறவில், தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல உணவு அருந்திவிட்டு, இருவரும் உறங்கியுள்ளனர். நேற்று காலையில், அமாவாசைக்கு சுவாமி கும்பிடுவதற்காக, சுந்தரை சிவகாமி எழுப்பியபோது, அவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் தெரிவிக்க, அருகே உள்ள உறவினர்களை அழைக்க சென்றபோது, தாய் சிவகாமி மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மகன் இறந்த அதிர்ச்சி தாங்க முடியாமல், தாய் உயிர் இழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :