70 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய கார்

by Staff / 21-12-2022 04:32:32pm
70 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய கார்

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த நரசிம்மரெட்டி (35), நிக்கல்ரெட்டி (23), டாக்காநிக்கல்ரெட்டி (25) உறவினர்களான 3 பேரும் காரில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உறவினர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு காரில் மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை நரசிம்மரெட்டி ஓட்டி வந்துள்ளார். ஆற்காடு-செய்யாறு சாலையில் அதிவேகமாக வந்தபோது புதுப்பாடி ஜி. எம் நகர் அருகே உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு வேலியை அறுத்துக் கொண்டு 70 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்தது.

கிணற்றில் நீர் நிரம்பி இருந்ததால் கார் முழுகுவதற்குள் காரில் இருந்த 3 பேரும் வெளியே குதித்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் மீட்டனர். பின்னர் ஆற்காடு தாலுகா போலீசார் மற்றும் கலவை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், உஷா மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் கிணற்றிலிருந்து கார், கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
 

 

Tags :

Share via