பெங்களூரு-மைசூரு இடையே மின்சார பேருந்து சேவை தொடங்கியது.

by Editor / 16-01-2023 10:41:52pm
பெங்களூரு-மைசூரு இடையே  மின்சார பேருந்து சேவை தொடங்கியது.

கா்நாடகத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி டீசல், பெட்ரோல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பஸ்களை இயக்க மாநில அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில் முதல்கட்டமாக பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் மின்சார பஸ் சேவையை தொடங்க திட்டமிட்டது. அதன்படி மின்சார பஸ்சின் சோதனை ஓட்டம் பெங்களூருவில் இருந்து ராமநகர் வரை சனிக்கிழமை நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மின்சார பஸ்களை வெளிமாவட்டங்களுக்கு இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி. முடிவு செய்தது.

அதன் படி, பெங்களூரு-மைசூரு இடையே கே.எஸ்.ஆர்.டி.சி.யின் முதல் மின்சார பஸ் சேவை இன்று தொடங்க உள்ளது. இந்த பஸ்சில் 43 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஒரு இருக்கைக்கும், மற்றொரு இருக்கைக்கும் 12 மீட்டர் இடைவெளியில் விசாலமாக மின்சார பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளை கவரும் வகையில் இருக்கும்.

இந்த மின்சார பஸ் பெங்களூரு-மைசூரு இடையே இடைநில்லாமல் இயக்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் அன்புகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மின்சார பஸ்சில் எந்தவித இரைச்சல் சத்தம் இல்லாமலும், மாசு இல்லாமலும் உயர்தர வசதியுடன் மக்கள் பயணிக்கலாம். இந்த மின்சார பஸ்சில் பெங்களூரு-மைசூரு இடையே ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த மின்சார பஸ்சை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் வரை இயக்கலாம். முதல்கட்டமாக 20 பஸ்கள் இந்த மாத இறுதிக்குள் இயக்கப்படும். மீதமுள்ள பஸ்கள் அடுத்த மாதம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via