குமரி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு.

by Editor / 17-01-2023 10:51:43am
குமரி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு.

குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு பறவை இனங்கள் நாடோடிகள் போல ஆண்டு தோறும் வருகின்றன. அதிலும் முக்கியமாக அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் இங்கு வருவது வழக்கமாக உள்ளது. இதே போல இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் குமரி மாவட்டத்தில் குவிந்துள்ளன. இவை மணக்குடி காயல், சுசீந்திரம் குளம், புத்தளம் காயல், தேரூர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தங்கி இரை தேடுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு படை குருவி (ரோசி ஸ்டார்லிங்), ஆலா, செங்கால் நாரை, ஊசி வால் வாத்து, சிறு கொசு உள்ளான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இதுபோக ஈரானை பிறப்பிடமாக கொண்டுள்ள பிலம்பிங்கோஸ் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன. அவை புத்தளம் காயலில் கூட்டம் கூட்டமாக உலா வருவதை பார்க்க முடிகிறது. இதுபோக உள்நாட்டுப் பறவைகளான முக்குளிப்பான், நீர்காகம், பாம்பு தாரா, புள்ளி மூக்கு தாரா, கூழக்கடா, பெரிய வெண் மூக்கு, குருட்டு கொக்கு, சாம்பல் கொக்கு, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாய் மூக்கன், பூ நாரை, வெள்ளை மீன் கொத்தி மற்றும் பல பறவைகளும் அதிகளவில் வந்துள்ளன.

 

Tags :

Share via