மணிகண்டனை  2 நாள்கள் போலீஸ்  காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 

by Editor / 02-07-2021 04:56:55pm
 மணிகண்டனை  2 நாள்கள் போலீஸ்  காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 

 

மணிகண்டனை  2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில் மணிகண்டன் தனது உறவினரிடம் கொடுத்து வைத்திருக்கும் மற்றொரு செல்போனை மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை பாலியல் புகார் அளித்திருந்த நிலையில் காவல் துறையினர் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 20ஆம் தேதி பெங்களூருவில் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை புழல் சிறையில் அடைத்தனர்.
மணிகண்டனின் கட்டாயத்தின் பேரில் நடிகை கருக்கலைப்பு செய்ததால் மருத்துவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால், தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், நடிகையின் முகத்தில் உள்ள காயத்திற்கும் சிகிச்சை அளித்ததாகவும் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னதாக மணிகண்டனிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் நடிகைக்கு அனுப்பியிருந்த ஆபாச குறுஞ்செய்திகள், ஆபாச புகைப்படங்கள், நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அந்தந்த சமயங்களிலேயே டெலீட் செய்திருப்பது காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இரண்டு செல்போன்களையும் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. நடிகையின் செல்போனையும் பறிமுதல் செய்து அதனையும் சைபர் ஆய்வுக்கு காவல் துறை உட்படுத்தி உள்ளது.
மணிகண்டன் நடிகைக்கு அனுப்பி டெலீட் செய்த மெசேஜ்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மணிகண்டன் தன்னிடமிருந்த இன்னுமொரு செல்போனை தனது நெருங்கிய உறவினரிடம் கொடுத்து வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த செல்போனைப் பறிமுதல் செய்யவே காவல் துறையினர் பாதுகாப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், காவல் துறையினருக்குப் பாதுகாப்பு கொடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.
மணிகண்டனின் அந்த செல்போன் வழக்குக்கு முக்கியமான ஆதாரமாகப் பார்க்கப்படுவதால், அதனைப் பறிமுதல் செய்யும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் மணிகண்டனை  2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

 

Tags :

Share via