சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை

by Staff / 11-02-2023 01:19:46pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தொல்லை ஈரோட்டை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 43). தொழிலாளி. இவருக்கு பாக்கியமேரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பாக்கியமேரி கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் டி. வி. பார்க்கலாம் என்று கூறி லோகநாதன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் சிறுமிக்கு பாலியல்தொல்லை கொடுத்த லோகநாதனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி தமிழக அரசு வழங்க நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

 

Tags :

Share via