தமிழகம் முழுவதும் போலி கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ. 58 கோடி மோசடி

by Staff / 18-02-2023 01:01:55pm
தமிழகம் முழுவதும் போலி கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ. 58 கோடி மோசடி

சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கினார். அதிக வட்டி தருவதாக அறிவித்ததால் சேலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் அதில் முதலீடு செய்தனர்.இதையடுத்து அவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கூட்டுறவு சங்கம் தொடங்கினர். மேலும் அவர்கள் ஏ. டி. எம். கார்டுகளை வழங்கி அதற்கான எந்திரங்களையும் கூட்டுறவு சங்கங்கள் முன்பு அமைத்தனர்.இந்த நிலையில் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (52) என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில் ஜெயவேல் நடத்தி வந்த கூட்டுறவு சங்கத்தில் அதிக வட்டி தருவதாக கூறியதால் முகவர் ஒருவர் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பணம் முதலீடு செய்தேன். ஆனால் முதிர்வு காலம் வந்த பிறகு தனக்கு கிடைக்க வேண்டிய ரூ. 2 லட்சத்து 92 ஆயிரத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர் என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜெயவேல் மற்றும் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலியாக கூட்டுறவு சங்கம் நடத்தி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் ரூ. 58 கோடிக்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜெயவேல் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் கூட்டுறவு சங்கங்களில் போலீசார் ஆய்வு செய்து பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் ஜெயவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

 

Tags :

Share via