தாய் மகன் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 07-03-2023 04:00:55pm
தாய் மகன் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் செல்லப்பா நகரை சேர்ந்தவர் வேதாசலம். இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வேதாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தாயார் சம்பூர்ணத்துடன் அவரது இளைய மகன் நந்தகுமார் (வயது 40) தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சம்பூர்ணம் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் நோய் பாதிப்பு குணமடையவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சம்பூர்ணம் மற்றும் அவரது இளைய மகன் நந்தகுமார் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து, நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்தனர். அப்போது சம்பூர்ணம், அவரது மகன் நந்தகுமார் ஆகியோர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஷம் குடித்து தற்கொலை செய்த 2 பேரின் உடல்களையும் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்னை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via