பைக் மீது கார் மோதியதில் அக்கா தம்பி பலி

by Staff / 19-03-2023 05:07:38pm
பைக் மீது கார் மோதியதில் அக்கா தம்பி பலி

பம்மல், எல். ஐ. சி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகள் கலைச்செல்வி (26), மகன் சந்தோஷ்குமார் (21). இருவரும் ஒரே தனியார் டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கலைச்செல்வி தனது கணவர் சுரேந்தராவுடன், தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பகுதியில் வசித்து வந்தார்.அக்கா, தம்பி இருவரும்  நேற்று காலை, ஆயுதப்படை  பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பெரியப்பா குமரவேலை பார்ப்பதற்காக பைக்கில் புறப்பட்டனர். மேடவாக்கத்தில்  புதிதாக  கட்டப்பட்ட மேம்பாலத்தில் சென்றபோது,   பின்னால் அசுர வேகத்தில் வந்த கார் இவர்களின் பைக் மீது மோதியது.இதனால், கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கலைச்செல்வி சுமார் 30 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து, பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். சந்தோஷ் குமார் பாலத்தின் மீது படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார்.   அக்கம்பக்கத்தினர், கலைச்செல்வியை மீட்டு, பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.   குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்தோஷ்குமார், மேல் சிகிச்சைக்காக  ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.   தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தனியார் மருத்துவமனைக்கு விரைந்து கலைச்செல்வி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் குமார் சடலத்தை மீட்டு,   பிரேத பரிசோதனைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக,   வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய  மறைமலை நகர், திருநாவுக்கரசு தெருவை சேர்ந்த கார் டிரைவர் ஆலம்(26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அக்கா, தம்பி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ந்த  ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via