விபத்தில் இறந்தவர் மனைவிக்கு ரூ. 46. 22 லட்சம் இழப்பீடு

by Staff / 05-06-2023 05:10:06pm
விபத்தில் இறந்தவர் மனைவிக்கு ரூ. 46. 22 லட்சம் இழப்பீடு

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி, 55; பி. எஸ். என். எல். , டெலிகாம் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த இவர், 2017 ஜன. , 1ல், திருப்பதி - சென்னை பைபாஸ் சாலையில், இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், அங்குள்ள சாலை தடுப்பில் மோதியது.இதில், பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணா ரெட்டி சாலையில் விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, ஜன. , 28ல் உயிரிழந்தார். இந்த நிலையில், கணவரின் இறப்புக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், கிருஷ்ணா ரெட்டி மனைவி, மகள்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி பி. தங்கமணி கணேஷ் முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அஜாக்கிரதை, அதிவேகத்தால் விபத்து நடந்துள்ளது. இதில், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால், மனுதாரரின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனவே, மனுதாரர்களுக்கு 46. 22 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7. 5 சதவீத வட்டியுடன், 'த நேஷனல் இன்சூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via