கல்லூரி மாணவருக்கு கத்தியால் வெட்டு

by Staff / 06-10-2023 05:35:19pm
 கல்லூரி மாணவருக்கு கத்தியால் வெட்டு

‘ரூட் தல’ பிரச்சினையில் கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சக மாணவர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருப்பச்சூர் பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 20). இவர் சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். திருவள்ளூர் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் சத்தியமூர்த்தி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மாநில கல்லூரி மாணவர்கள் 6 பேர் சத்தியமூர்த்தியிடம் எந்த ஊர்? என விசாரித்தனர். அவர் திருவள்ளூர் என பதிலளித்தார். அப்போது, நாங்கள் செல்லும் ரயிலில் நீ வரக்கூடாது எனக் கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சத்தியமூர்த்தியை வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பித்து சத்தியமூர்த்தி ஓடினார். அவரை விடாமல் துரத்திய 6 பேரும் அவரின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டினர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் படுகாயமடைந்த சத்திய மூர்த்தியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via