சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் செய்தியாளர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

by Editor / 22-11-2023 09:24:27pm
சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர்  செய்தியாளர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முத்துக்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது தனியார் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் நேற்றிரவு கங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து, படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற துயர செய்தியினை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

சாலை விபத்தில் உயிரிழந்த முத்துக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Share via