சென்னை தி.நகர் உட்பட 9 இடங்களில்  மூடப்பட்டிருந்த கடைகள்  திறப்பு

by Editor / 09-08-2021 04:16:08pm
 சென்னை தி.நகர் உட்பட 9 இடங்களில்  மூடப்பட்டிருந்த கடைகள்  திறப்பு


சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 இடங்களில் 9 நாட்களாக மூடப்பட்டிருந்த கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து  கடைகள் திறக்கப்பட்டதால், இயல்பு நிலை திரும்பியது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.


கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவது தொடர்ந்து காணப்பட்டால் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், போலீசார் அந்த பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் (ஜூலை) 30-ந் தேதி அறிவித்தார்.


உடனடியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் கடந்த ஜூலை 30ந்தேதி நடைபெற்றது.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரெயில் நிலையம் வரை; புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை; ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை; பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை;


ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை; அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை; ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை; கொத்தவால் சாவடி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் கடந்த ஜூலை 31ந் தேதி முதல் ஆகஸ்ட் 9ந் தேதி காலை 6 மணி வரை மூட உத்தரவிடப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.இந்த நிலையில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று  கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியது.


அதே நேரத்தில் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத கடைகளை மூடி ‘சீல்’வைக்க அந்தந்த மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்துதி.நகர் ரெங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரெயில் நிலையம் வரையிலான பகுதிகளில் சாலையோர கடைகள் வழக்கம்போல இயங்கின.ரெங்கநாதன் தெருவில் உள்ள பெரிய ஜவுளி கடைகள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் காணப்பட்டது. வழக்கமான பரபரப்புடன் அங்கு இயல்பு நிலை திரும்பி இருந்தது.


கடந்த 9 நாட்களாக கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால், இன்று காலை கடைகளை திறந்ததும் ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர். நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்து, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். காலை முதலே ஏராளமானவர்கள் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.


முக கவசம் அணியாத பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த கடைகளின் திறப்பு நேரத்தை குறைக்க மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

 

Tags :

Share via