10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு

by Editor / 04-10-2021 03:48:21pm
10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு



பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்புதுறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.inல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியாது இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தியமையால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.


இதனைக் கருத்தில் கொண்டு தற்போது 2020- 2021 ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் இன்று (4 ந் தேதி) வழங்கப்பட உள்ளதை அடுத்து இன்று முதல் 18 ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in-ல் தங்கள் அளவிலேயே ஆன்லைனி-ல் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், மேற்படி பதிவுகள் மேற்கோள்ளும் போது அரசு விதித்துள்ள கொரோனா வழிமுறைகளான, சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சோப்பினால் கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட அறிவுறுத்தல் போன்றவைகளை அத்தியாவசியம் கடைபிடித்து செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

 

Tags :

Share via