சோலார் பவர் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ்

by Editor / 11-10-2021 08:08:18pm
 சோலார் பவர் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ்

நார்வேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி நிறுவனமான ‘ஆர் ஈ சி சோலர் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் குழுமம் (ஆர் ஐ எல்).‘ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடட் (ஆர் என் இ எஸ் எல்)’  நிறுவனம்,  சீனா நேஷனல் ப்ளூஸ்டார் குழுமத்திடம் இருந்து  சுமார் 5800 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனத்தை வாங்கியுள்ளது.லையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்  முகேஷ் அம்பானி, ஆர் ஈ சி நிறுவனத்தை கையகப்படுத்தியதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

ஆர் ஈ சி நிறுவனத்தில் உலகம் முழுவதும் 1300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பரிவர்த்தனை முறையாக நிறைவடைந்த பின், அவர்கள் ரிலையன்ஸ் குழும பணியாளர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, அடுத்த 3 ஆண்டுகளில், ரூபாய் 75 ஆயிரம் கோடி  செலவில் குஜராத்தின் ஜாம்நகரில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் 4 ஆலைகளை ஏற்படுத்திட ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜாம்நகரில் 5000 ஏக்கரில் மெகா கட்டுமானத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கட்டுமானம் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வளாகமாக கட்டப்பட்டு வருகிறது.1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர் ஈ சி (புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம்) நிறுவனம், ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1800 மெகாவாட் மின் உற்பத்தியை அளிக்கும் திறனுள்ள சோலார் பேனல்களை தயாரித்து வருகிறது. இதுவரை பத்தாயிரம் மெகாவாட் திறனுள்ள சோலார் பேனல்களை உலகம் முழுவதும் அமைத்துள்ளது.2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி 1 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via