ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை

by Admin / 17-01-2022 12:07:33pm
ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை

சிங்கப்பூரில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 692 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டது. 

இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதை போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்று தொற்று நோயியல் நிபுணர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

சிங்கப்பூரில் எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஒமைக்ரான் அலையின் தீவிரம் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆனாலும் சிங்கப்பூரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளை விட சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் மெதுவாகவே இருக்கும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சிங்கப்பூரில் மக்கள் தொகை 60 லட்சம் ஆகும். இதில் 90 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். ஒவ்வொரு 10 பேரில் 5 பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். ஆனாலும் அங்கு ஒமைக்ரான் வகை தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


 

 

Tags :

Share via