குடியரசு தினவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு
இந்தியாவின் 73-வது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் நாளை (26-ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமான கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி ரயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப் பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags : Intensive surveillance in Kanyakumari district ahead of Republic Day