சித்ரா ராமகிருஷ்ணா அதிரடி கைது
தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லியில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பணியாற்றி வந்தார்.
அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது.
முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், மும்பையில் உள்ள, சித்ரா ராமகிருஷ்ணாவின் வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில், மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.
இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மும்பையில் விசாரணை நடத்த தொடங்கிய சி.பி.ஐ. வட்டாரங்கள், சித்ரா ராமகிருஷ்ணன் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களை சி.பி.ஐ. ஆய்வு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர் என கூறப்படும் ஆனந்த் சுப்பிரமணியம் கடந்த 25ஆம் தேதி சென்னையில் வைத்து சி.பி.ஐ. கைது செய்திருந்தனர்.
இந்த சூழலில் சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்றிரவு சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்த சி.பி.ஐ., விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Tags :