கடத்தல் கும்பல்களுக்கு இடையே மோதல் இருவருக்கு அரிவாள் வெட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான ரேசன் அரிசி பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதிலும் கடத்தல்காரர்கள் பல பிரிவுகளாக பிரிந்து தங்களது கடத்தல் தொழில்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு களியக்காவிளை காவல்நிலையத்திற்கு உட்பட்ட குளப்புறம் அன்னிக்குளம் பகுதி வழியாக ஒரு தரப்பினர் கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரில் ரேசன் அரிசி மூடைகளை கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர் .
இதனை தெரிந்துகொண்ட மற்றொரு கடத்தல் குழுவினர் அன்னிக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து,காரை வழிமறித்து அதிலிருந்த இரண்டு பேரை அரிவாளால் சரமாரியாக தலை மற்றும் வயிற்று பகுதியில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர் .
தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
அரிசியுடன் நின்றிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :