போலீஸார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழப்பு

by Staff / 02-05-2022 01:20:52pm
போலீஸார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சமூகப் பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்துதவற்காக மன்ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னையா யாதவ் என்பவரின் வீட்டுக்கு நேற்று இரவு போலீஸார் சென்றுள்ளனர். அப்போது கன்னையாவிடம் போலீஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 இதனை பார்த்த கன்னையாவின் மகளான நிஷா யாதவ் (21) மற்றும் மனைவி ஆகியோர் போலீஸாரின் இந்த நடவடிக்கையை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், நிஷாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூர்ச்சையாகி கீழே விழுந்த நிஷா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதையடுத்து நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த போலீஸார் அங்கிருந்து உடனடியாக சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கு பெருந்திரளாக வந்து போலீஸாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சம்பந்தப்பட்ட சையது ராஜா காவல் நிலைய ஆய்வாளரை மாவட்ட எஸ்.பி. இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via