வேதனையில் ஆழ்த்தும் செய்தி: கணவன் இறந்ததும் தெரியாமல் மனைவியும் கொரோனால் இறப்பு! தவிக்கும் குழந்தைகள்

by Editor / 27-05-2021 05:16:04pm
வேதனையில் ஆழ்த்தும் செய்தி: கணவன் இறந்ததும் தெரியாமல் மனைவியும் கொரோனால் இறப்பு! தவிக்கும் குழந்தைகள்

வேலூர் காட்பாடியிலுள்ள டாஸ்மாக் எலைட் மதுக்கடையில் பணிபுரிந்து வந்தவர் சிவராஜ் (வயது 45). இவரின் மனைவி பாமா (38). இந்தத் தம்பதிக்கு 10 வயதில் இமான், 7 வயதில் ஜோயல் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவராஜும், அவரின் மனைவியும் வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் சிவராஜ் 24-ம் தேதி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரின் மனைவி பாமாவும், கணவன் இறந்ததுகூட தெரியாமல் நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டார். தாய், தந்தையைப் பறிகொடுத்த இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் நிர்க்கதியாகத் தவிக்கிறார்கள். `இப்படியொரு துயரம் எதிரிக்கும்கூட வரக்கூடாது' என்று குழந்தைகளின் நிலையைக் கண்டு கதறித் துடிக்கிறார்கள் உறவினர்கள்.மரணமடைந்த தம்பதி

இதுதொடர்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை மனு ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். அதில், ``கொரோனா தொற்றுக்கு டாஸ்மாக் பணியாளர் சிவராஜ் மற்றும் அவரின் மனைவி பாமா இறந்துள்ளனர். அவர்களுடைய குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும். தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

Tags :

Share via