ரேஷன் கடைகளில் நாளை முதல் கூடுதல் அரிசி!

by Editor / 04-06-2021 09:52:18am
ரேஷன் கடைகளில் நாளை முதல் கூடுதல் அரிசி!

தமிழகம் உட்பட நாடு முழுதும் கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அந்தந்த மாநில அரசுகள் மக்களுக்கு உதவி அளித்து வருகின்றன. இந்த நிலையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் கூடுதல் அரிசி வழங்கப்படவுள்ளது. மே, ஜூன் மாதங்களில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்குவதுடன் கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியர்கள், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு உணவு வழங்கல் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை முன்னுரிமையற்ற கார்டுதாரர்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதல் அரிசியை இலவசமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரிசி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மே மாதம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி, ஜூலை மாதத்திற்கு வழங்கப்படும் அரிசியுடன் சேர்த்தும்; ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீடு, ஜூன் மாத ஒதுக்கீட்டுடன் சேர்த்தும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via