விவசாயிகளால் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்களால் சுற்றுலாத்தலமாக மாறிய வயல் வெளிகள்

by Editor / 24-08-2022 03:15:27pm
விவசாயிகளால் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்களால் சுற்றுலாத்தலமாக மாறிய வயல் வெளிகள்

தென்காசி மாவட்டத்திலுள்ள  மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள குற்றாலம், ஐந்தருவி,பழையகுற்றாலம் என அருவிகள் நிறைந்த இந்தப்பகுதி பிரபல சுற்றுலாத்தலம். இதனையெல்லாம் தூக்கி சாப்பிடுமளவுக்கு  கடந்த சில வாரங்களாக சுரண்டையை சுற்றியுள்ள கிராமங்கள் திடீர் சுற்றுலாத்தலங்களாக மாறியுள்ளன. சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டிபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் வருடம் தோறும் மே,ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் ஆகிய 4 மாதங்கள்  சூரியகாந்தி மலர் பயிரிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தற்போது சூரியகாந்தி மலர் சுந்தரபாண்டியபுரம், சாம்பவர்வடகரை,கம்பிளி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள. தற்போது சூரிய காந்தி மலர்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கும் நிலையில், சூரியகாந்தி மலரின் கவர்ச்சி மனதை கொள்ளை கொள்ளும் அழகை பார்ப்பதற்காக ஏராளமான கேரளா மாநிலத்தவர்கள் கம்பிளி,சுந்தரபாண்டியபுரம், சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் குடும்பத்தோடு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

 விடுமுறை தினங்களில்  அளவுக்கு அதிகமான மக்கள் சூரியகாந்தி மலர்களை காண்பதற்கும் அம்மலர்க்கூட்டம் நடுவில் செல்ஃபி எடுப்பதற்கும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குற்றாலத் தென்றல் காற்றுடன் மஞ்சள் கொஞ்சும் சூரியகாந்தி மலர்களுக்கு நடுவே ஒரு செல்ஃபி எடுக்கத்தான் இத்தனை தூரம் பயணித்து இங்கு வருகின்றனர் கேரள மாநிலத்தவர். இதனால் சுற்றுலாத்தலம் போல காட்சியளிக்கும் இந்த பகுதியில் வியாபாரமும்  களைகட்ட தொடங்கி உள்ளது. 

கேரள மாநிலத்தவர்கள் சூரியகாந்தி மலரை பார்த்துவிட்டு வயல்வெளிகளில் இருந்து நேரடியாக அறுவடை செய்து விற்பனையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர். இதனால் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒரு சில விவசாயிகள் சூரியகாந்தி மலரால் ஏற்படும் வருமானத்தை விட, மலரை காண வந்தவர்களிடம் வருமானம் ஈட்ட முடிவு செய்து ஒரு சில வயல்வெளிகளை சேர்ந்த விவசாயிகள் டோக்கன் போட்டு டோக்கன் ஒன்றுக்கு ரூபாய் 20 வீதம் வசூல் செய்து மலரை காண அனுமதி வழங்கி வருகின்றனர். 
 

விவசாயிகளால் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்களால் சுற்றுலாத்தலமாக மாறிய வயல் வெளிகள்
 

Tags :

Share via