விபத்துக்களால் பாதியில் நின்ற திருமணங்கள்

by Editor / 11-09-2022 10:09:05am
விபத்துக்களால் பாதியில் நின்ற திருமணங்கள்


கல்யாணம்தான் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுது என்பது சில சமயங்களில் நடக்கும் சம்பவங்களால் உண்மையாகவே அப்படித்தானா என எண்ணத்தோன்றுகிறது.ஆமாங்க..தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமணத்திற்கு சென்றவர்களின் வாகனங்கள் விபத்தில் சிக்கியதால்  திருமண நிகழ்வுகள் சோகத்தில் முடிந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திப்பம்பட்டியை சேர்ந்த ராமுவுக்கும், உஷாராணிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கு வாகனத்தில் சென்ற போது ஊத்தங்கரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற டாரஸ் லாரியை வேன் வேகமாக முந்திச் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த உஷாராணியின் சகோதரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கண்முன்னே தனது சகோதரி துடிதுடித்து பலியானார்.ஓட்டுநர் அலட்சியத்தால் வேகமாக வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் நொடி நேரத்தில் எல்லாம் மாறியது. உஷாராணிக்கு நீண்ட நாட்கள் வரன் பார்த்து தற்போதுதான் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அதுவும் கடைசி நேரத்தில் நின்று போனது.


தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. வீட்டில் யாரிடமும் சொல்லாமல் புறப்பட்ட ஜெகதீஷ், துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது  வாகனம் மோதி, ஜெகதீஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

விருதுநகர் மாவட்டம் சோலைசேரியில் இருந்து திருமணத்திற்காக மணமகள் குடும்பத்தினர் மூன்று வேன்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். பருவக்குடி அருகே வந்த போது பின்பக்க டயர் வெடித்து வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் ஓட்டுநரோடு சேர்த்து 13 பேர் மட்டுமே செல்லக்கூடிய வேனில் 30-க்கும் மேற்பட்டோர் வந்ததால் பாரம் தாங்காமல் டயர் வெடித்து வேன் கவிழ்ந்து  விபத்து ஏற்பட்டதால், திருமணம் பாதியிலேயே நின்று போனது. 

புதுச்சேரியில் இருந்து திருமண கோஷ்டி ஒன்று திருத்தணி மலைக்கோயில் திருமணத்தை முடித்துவிட்டு, முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வேனில் வந்த போது, வேன் திடீரென பிரேக் பிடிக்காமல் போன நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், வேனை திருப்பி சுற்றுச் சுவரில் மோதி நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சில சம்பவங்கள் நமது அஜாக்கிரதைகாரணமாகவே நடக்கிறது என்பதனை யாரும் உணர மறுப்பதால்தான் விபத்துக்களை தடுக்கமுடியாது நிலை உருவாகிறது.விபத்தில்லா பயணத்தை தொடர் நாமும் விழிப்போடு இருப்போம்.
 

 

Tags :

Share via