அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 16-09-2022 01:05:29pm
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாதவரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்கள். நேற்று மதுரையில் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைத்த நிலையில், இதர 37 மாவட்டங்களில் இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் முதற்கட்டமாக வடசென்னைப் பகுதிகளில் உள்ள 37 பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

சென்னையில் மாதவரம், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் 5,941 மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 1,545 பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் பேர் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம். ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஓரிரு நாட்கள் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது தான் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்பட உள்ளது. உணவு தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அம்மா உணவகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க முடியாது என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், அம்மா உணவகங்களுக்கும், காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கும் தொடர்பில்லை என்றார். மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
2020-ல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் காலை உணவுத் திட்டம்
இருக்கிறது என்று சொன்னால், அப்போதே ஏன் தமிழ்நாட்டில் திட்டத்தை தொடங்கவில்லை?. அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது தொடங்காமல், இப்போது பேசுகின்றனர். சர்.பிட்டி.தியாகராயர், காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 9 குழந்தைகள் H1 N1 வைரஸால் பாதிக்கப்பட்டு
உயிரிழந்துள்ளனர். இந்த மாதம் மட்டும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறி பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம். H1N1 வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
 

Tags :

Share via