இரிடியம் ரூபாய் 10 லட்சம் மோசடி; 2 பேர் கைது.

by Editor / 26-09-2022 08:55:04am
இரிடியம் ரூபாய் 10 லட்சம் மோசடி; 2 பேர் கைது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிழக்கத்திக் காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராதாகிருஷ்ணன். இவர், ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஓமலூர் சக்கரை செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கவுண்டர் மகன் ராஜி என்பவர் தன்னிடம் இரிடியம் உள்ளது என்று கூறியும் அதற்கு ரூபாய் 10 லட்சம் கொடுத்தால் இரண்டு மாதம் கழித்து 20 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல ஓமலூர் வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மகன் ராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தாத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்த வில்வேந்திரன், தன்னிடம் இரிடியம் மாயக்கற்கள், திமிங்கல வாந்தி ஆகிய பொருட்கள் உள்ளதாகவும், மேலும் வெளிநாட்டில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் கணக்கில் வராத பணம் பல கோடி உள்ளதாகவும் அதை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கும் குறைந்த அளவில் வரி செலுத்த வேண்டும் எனவும் அதற்கான பணத்தை கொடுத்தால் இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாக கூறி ஏமாற்றி மோசடி செய்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.


மேற்படி புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டதால், ராஜி மற்றும் வில்வேந்திரனை சேலம் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். 

 

Tags :

Share via