மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் அமைக்க அண்ணாமலை கோரிக்கை.

by Editor / 03-11-2022 06:50:22am
மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் அமைக்க அண்ணாமலை கோரிக்கை.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037-வது சதய விழா நேற்று தொடங்கியது.

இந்நிலையில், மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை ஏற்று இந்த ஆண்டு முதல் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 
அறிவிப்பு வந்த இந்த நன்னாளில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக ஒரு கோரிக்கையை தமிழக மக்களின் சார்பாக முன்வைக்கிறோம்.

அகில உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது. பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் இதனை முதலமைச்சர் செயல்படுத்திட வேண்டும் என்றும் அண்ணாமலை அந்தப்பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via