11-ம் தேதி பிரதமர் வருகை மதுரை விமான நிலையம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை: காவல்துறை அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் பல்கலை கழகத்தில் நடைபெறும் 36வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையத்திற்கு 11.11.2022 அன்று (வெள்ளிக்கிழமை) பாரத பிரதமர், தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் வருவதை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாலும்,கோவையில் சிலிண்டர் குண்டு வெடித்த நிலையிலும்,தலைவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக உள்ளதால் மேற்படி பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் முழு சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும். ஆதலால் பயணிகள் காலதாமதமின்றி சற்று முன்னரே விமான நிலையத்திற்கு வருமாறு காவல்துறை சார்பில் பாதுகாப்பு நலன் கருதி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் வானவெடிகள் வெடிக்க வேண்டாம் எனவும், புகைகள் வருமாறு எதையும் எரிக்க வேண்டாம் எனவும் தேவையற்ற நபர்கள் யாரேனும் அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் தென்பட்டால் உடனே தெரிவிக்குமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Tags : 11-ம் தேதி பிரதமர் வருகை